நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 26 மார்ச், 2012

உடல் பருமனை குறைக்கும் தயிர் !! { யோகர்ட் }

உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை உடல் பருமன். கண்ட நேரத்தில் சாப்பிடுவது. நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் என சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது. இதனால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் குறையும் என்று தெரியவந்துள்ளது.

யோகர்ட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டு நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்ட தயிர். இதில் உடல் பருமனை குறைக்கும் பாக்டீரியாக்கள் உள்ளனவாம்.

பொதுவாக தயிரில் புரதச் சத்து, கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை காணப்படுகின்றன.

கோடையில் துவர்ப்பா சாப்பிடுங்க! சாப்பாடு ஈசியா ஜீரணமாகும் !!

கோடையில் உணவு ஜீரணமாவது சற்றே சிரமமானது. கோடையில் காரமாகவும், அதேசமயம் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கோடைகாலத்தில் காரம், புளிப்பு, உப்பு போன்ற சுவைகளை தவிர்க்கவேண்டும். அதேசமயம் இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை உடைய உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும். இந்த சுவைகளால் பித்தம் சாந்தமடைகிறது. எனவே கோடையில் உண்ணவேண்டிய எளிதான ஆரோக்கிய உணவுகளை பட்டியலிட்டுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

மிதமான உணவு

கோடையில் மிதமாக உண்ணுங்கள் இதனால் ஜீரண உறுப்புகள் எளிதாக உணவுகளை ஜீரணித்து சத்துக்களாக மாற்றும். நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும். இதனால் பசி தூண்டும். அதேபோல் கீரை வகைகளை சாப்பிடலாம்.

இனிப்பான பழங்கள்

பழவகைளில் இனிப்பானவை நல்லது. மலைப்பழம், பூவன்பழம், நேந்திரம் வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை ஆகியவற்றின் பழரசங்களை பசிநிலைக்குத் தகுந்தவாறு குடித்து உடல் சூட்டை தணித்துக் கொள்ளவேண்டும்.

துவர்ப்பு சுவை காய்கள்

துவர்ப்புச் சுவைகொண்ட வாழைப்பூவை வடைகறி செய்து சாப்பிட்டால் பித்த சாந்தியும், ரத்த சுத்தியும் ஏற்படும் வாரத்திற்கு இருமுறையாவது கோடையில் வாழைப்பூவை உணவில் சேர்க்க வேண்டும். அதுபோல நீர் காய்களாகிய வெள்ளரிக்காய், புடலங்காய் பூசணிக்காய் போன்றவற்றை கூட்டு போல் (தேங்காய், மிளகு, ஜீரகம் பொடித்து சேர்த்த) செய்து சாப்பிடவேண்டும். தண்ணீரைக்கூட மண்பானையில் ஊற்றி குடிக்கலாம் உடல் சூடு குறையும்.

வெள்ளரிக்காய்

தினசரி உணவில் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி போன்றவைகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சி, கொத்தமல்லி, உள்ளிட்டவைகளை உணவு ஜீரணத்திற்காக சேர்த்துக்கொள்ளலாம். இதனால் கோடையில் சூட்டினால் ஏற்படும் வயிறு கோளாறுகள் தவிர்க்கப்படும்.

இதயநோய் வராமல் தடுக்க ஏழு முக்கிய அம்சங்கள் !!

இதயநோய் என்பது இன்றைக்கு பெரும்பாலானோரை தாக்கும் நோயாக உள்ளது. இதயாநோய் வராமல் தடுக்க ஏழு முக்கிய அம்சங்களை பின்பற்றுமாறு அமெரிக்காவில் உள்ள இதயநோய் பாதுகாப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதயத்தை பாதுகாக்க

ஆரோக்கியமான இதயத்தை பெற விரும்புபவர்கள் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கக் கூடாது

ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்த படியே வேலை பார்க்க்க் கூடாது. ஆக்டிவாக இருக்கவேண்டும்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு ஆகியவைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடல் எடையை ஒரே சீராக வைத்திருப்பது அவசியம், அதேபோல் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஏழு முக்கிய அம்சங்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதயத்தைக் கொல்லும் புகையிலை

புகையிலைப் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் 20 சதவிகிதம் பேர் இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். பெரும்பாலோனோர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் புகையிலையில் உள்ள நிகோடின்தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவேதான் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடல் பருமன்

அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பேர் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு இந்தியாவிலும் பெரும்பாலேனோர் உடல் பருமானால் பாதிக்கப்பட்டு நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் இதயத்தை பாதிக்கும் முக்கிய காரணியாகும். எனவேதான் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும், கொழுப்பு அளவும் கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

துளசி இலையின் மருத்துவ குணங்கள் !!!

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

துளசியின் தெய்வீகத்தன்மை

இந்தியாவில் துளசி இலை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்த துளசி இலை சேர்த்த தண்ணீர் கோவில்களில் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. துளசி இலை மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாகும். துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள 'அர்சாலிக்' அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.

ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.

தற்போது துளசியில் உள்ள Ocimum sanctum என்ற பொருள் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள். விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டறிந்துள்ளனர்.

நீரிழிவு குணமாகும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள், போன்றவை பாதிக்கப்படுகின்றன. துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த ஆய்விற்கு எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழுவினர் முதலில் 'ஸ்ட்ரெப்டோசோசின்' என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையில் இருந்து இவர்கள் கண்டுபிடித்த மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறைக்கப்பட்டிருந்த்தோடு, முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், ஈரல் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

தினசரி இரவில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் எழுந்து குடித்து வர நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தினசரி துளசி இலைகளை மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மூளைபுற்று நோயை தடுக்கும் வைட்டமின் ‘சி’

வைட்டமின் சி யினால் மனித உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகின்றன என்பது தெரிந்த விசயம். அதே சமயம் வைட்டமின் சி மூளைப் புற்றுநோயை குணமாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளது.

அஸ்கார்பிக் அமிலம்

அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய, ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் மற்றும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும். நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்டமின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலூட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும். வைட்டமின் சி பற்றாக்குறையால் முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு வைட்டமின் சி அதிக முள்ள உணவுகளை கொடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம்.

வைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளைப் புற்றுநோய்

மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்காவின் ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அதிக அளவில் வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 16 மார்ச், 2012

தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி... ஆண்களுக்கு அவசியமானது !

கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கோடைகாலமும் தர்பூசணியும்

இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.

தர்பூசணியில் உள்ள சத்துக்கள்

தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.

இயற்கை வயாக்கரா

தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

இதயநோயாளிகளுக்கும் நன்மை

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

புதன், 14 மார்ச், 2012

புற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் ஆஸ்பிரின் மாத்திரை[Aspirin]

ஆஸ்பிரின் மாத்திரைகளை ஏதோ தலைவலி குணப்படுத்தும் மாத்திரை என்று நினைத்துக் கொண்டிருக்க, இருதய நோயாளிகளுக்கு இன்று ஆபத்பாந்தவனாகவும் இன்றியமையாத மருந்தாகவும் செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், புற்றுநோயை கட்டுப்படுத்த பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஆஸ்பிரின் மாத்திரைகள் சாப்பிட்டால் புற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம், என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் தான் புற்று நோய் வேகமாக பரவுகிறது. ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ரசாயன மூலக் கூறுகள் சுரக்கும் நிணநீரின் தன்மையை கட்டுப்படுத்துகிறது. அதனால் புற்று நோய் வேகமாக பரவுவது தடுக்கப்படுகிறது என ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மார்பக புற்று நோய் போன்றவற்றுக்கு தொடக்க காலத்திலேயே ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் அவை மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். நுரையீரல், மூளை மற்றும் தொண்டை புற்று நோயை பரவாமலும் ஆஸ்பிரின் தடுக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஞாயிறு, 4 மார்ச், 2012

குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடுங்க ! குழந்தைகளுக்கு நல்லது !!

குடும்பத்தினரின் பராமரிப்பில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் நோயினால் அவதியுறுகின்றனர். ஒரு இடங்களில் சரிவிகித சத்துணவு கிடைக்காமல் நோய்க்கு ஆளாகின்றனர். இந்த இரண்டுமே தவறானது. இதனால் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளின் ஆரோக்கிய குறைபாட்டிற்கு பெற்றோர்களும், முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

நோய் தாக்குதல் அதிகம்

ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 2 முதல் 17 வயதுடைய 1லட்சத்து 83 ஆயிரம் பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்பு நிலையத்தின் கணக்கெடுப்பின் படி கடந்த 3 வருடங்களாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பானது 3 மடங்கு உயர்ந்துள்ளது. அத்தோடு இந்த எண்ணிக்கை 2008இல் 20 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.

இந்த அதிக உடல் பருமன் குழந்தைகளின் சுய மதிப்பீட்டைக் குறைத்து அவர்களை இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு ஆளாக்குகிறது என்று கண்டறியப்பட்டது.

குடும்பத்தோட சாப்பிடணும்

பெற்றோர்களோடு அமர்ந்து வாரத்தில் மூன்று நாட்களுக்கு உணவு உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பது 12 சதவிகிதம் குறைவாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இவ்வாறானவர்களில் வேண்டாத உணவுப்பொருட்களை உண்பவர்கள் 20 வீதம் குறைவாகவும், சாப்பாட்டு பிரச்சினை, சாப்பிடாமல் இருப்பது என்பன 35 வீதம் குறைவாகவும் மரக்கறி மற்றும் இதர ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உண்பவர்கள் 24 வீதம் அதிகமாகவும் உள்ளனர்.

குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்தும்போது ஊட்டச்சத்துள்ள உணவுகள் குழந்தைகளுக்கு அதிகம் கிடைத்தன. குழந்தைகளும் அவற்றை ஆர்வமுடன் உட்கொண்டதாக மனோத்தத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,

எல்லா ஆய்வுகளுமே வீட்டில் குடும்பமாக அமர்ந்து உண்ணுவது சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறக்கூடிய நல்லதொரு வழியாகவே சுட்டிக்காட்டுகின்றன. நம் நாட்டில் காலை நேரத்தில் குழந்தைகளுக்கு அவசரமாக ஊட்டி விடுவதும், மதியம் பள்ளியில் சாப்பிடுவதும் வழக்கம் என்றாகிவிட்டது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அதேபோல் விடுமுறை நாட்களில் மூன்று வேளையும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

கருணைக்கிழங்கு மசியல்

கருணைக்கிழங்கு மருத்து குணம் நிறைந்தது. இது மூலநோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இதனை சமைத்துக் கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

பிடி கருணைக் கிழங்கு - 4 அல்லது 5
சின்னவெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்து தாளிக்க
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

கருணைக் கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிறகு தண்ணீரை விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். குக்கரிலும் வேக வைக்கலாம். கிழங்கின் தோலை உறித்து நன்றாக மசித்து வைக்கவும்.

பின்னர் வானலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெடித்த உடன் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும். அந்த கலவையில் மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்கினை போட்டு நன்றாக பிரட்டவும்.

கிரேவி அதிகமாக வேண்டுமெனில் கால் டம்ளர் தண்ணீர் கூடுதலாக விடலாம். மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் வைத்து கிளறலாம். மசியலானது எண்ணெய் மினுப்போடு சூப்பராக வரும். சூடாக சாதத்தில் போட்டு சாப்பிடலாம். மருத்துவ குணம் நிறைந்தது.

கருணைக் கிழங்கை நீண்டநாட்கள் வைத்திருந்து சமைத்தால்தான் காரல் தன்மை இன்றி இருக்கும். நல்லெண்ணெயில் சமைப்பதால் அரிப்பு இருக்காது. ருசி கூடுதலாகவும் இருக்கும்

சாப்பிடும் போது ரசிச்சு சாப்பிடுங்க ! உடம்புக்கு நல்லது !!

நாம் உண்ணும் உணவை மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும், அப்பொழுதுதான் அந்த உணவின் பலன் அனைத்தும் உடம்பிற்கு கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவை வாய்க்குள் அள்ளி எறிந்துவிட்டு செல்வது ஆபத்தானது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் நின்ற கோலத்தில் உணவை அள்ளி திணித்துவிட்டு ஓடுவர் பலர். காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை இதே நிலைதான். ஒரு சிலர் உண்ணும் உணவு கடமைக்காக மட்டுமேதான் இருக்குமே தவிர உணவின் தன்மை, ருசி பற்றி உணர்வதில்லை. இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உண்ணும் உணவை டென்சன் இல்லாமல் மெதுவாக சாப்பிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு உண்ணும் பழக்கத்திற்கும், உடல் எடைக்கும் உள்ள தொடர்பு குறித்து சமீபத்தில் 3,300 பேரிடம், “ஆன்லைன்’ மூலம் அமெரிக்கா நிபுணர்கள், ஆய்வு மேற்கொண்டனர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர்.

நேரம் தவறக்கூடாது

எந்த பணி செய்பவர்களாக இருந்தாலும் உண்பதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. உணவு உண்ணும் போது அதிலும், நம் கோபதாபங்களை எல்லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம்மிடம் எழும் அந்த உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டென்சன் கூடாது

விருந்துகளில் சிலர், வேகமாகவும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும்.இதனால், என்ன தான் “டென்ஷன்’ இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆன்டி ஆக்ஸிடெண்ட்

உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் “செல்’கள்! அவற்றுக்கு முக்கிய தேவை “ஆன்டி ஆக்சிடெண்ட்’ என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ,” ஆன்டி ஆக்சிடெண்ட்’ உள்ளது. அது தான் உடலில் உள்ள “செல்’களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும் என்றும் ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.

சுவையான முட்டை ப்ரைடு ரைஸ்

முதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு அகியவற்றை போட்டு சிறிது வதக்கவும். அதை தொடர்ந்து குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.

இந்த கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாகும் வரை நன்கு கிளறவும்.

இதில் உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறவும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். அப்போது அடுப்பை வேகமாக எறிய விடவும்.நன்றாக மிக்ஸ் ஆகி வாசனை வந்த உடன் அடுப்பை நிறுத்தி விடலாம்.

இதன்மேல் முந்திரிப்பருப்பு, துருவிய காரட், கொத்தமல்லி தூவி பரிமாறவும். சத்தான சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார். சாதம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் சாப்பிடுவர்