நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!


உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும்.





உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இப்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவறாமல் தொடருங்கள்.

எனர்ஜி கிடைக்கும்
 உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும். எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

கழிவுகளை வெளியேற்றும்
அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். ஏனெனில் மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்
 உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும்

மெட்டபாலிசம் அதிகமாகும்
 உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.


தசைப்பிடிப்புகளை தடுக்கும்
 80 சதவீத தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும்

முறையான குடலியக்கம்
நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.

பொலிவான சருமம்
முகத்தில் முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

அசிடிட்டியை குறைக்கும்
பொதுவாக வயிறானது உணவுகளை செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும்

மூளை செயல்பாடுகள்
மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.
மூட்டு உராய்வைத் தடுக்கும்
 உடலிலேயே மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு...
உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

எடை குறைப்பதற்கு...
தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

நீச்சல் அடித்தால் போதும் ஸ்லிம் வயிறுக்கு!! நீச்சல் தெரியுமா உங்களுக்கு?

உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் தொப்பை பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. அத்தகைய தொப்பை பிரச்சனை உங்களுக்கு இருக்கா? அதைக் குறைக்கப்படாத பாடுபடுகிறீர்களா? நடப்பது, ஓடுவது, ஜிம் என அனைத்தையும் செய்து பார்த்து விட்டு டல்லாக இருக்கிறீர்களா? இதை படியுங்கள் முதலில்!
நீச்சல் உடம்பைக் குறைக்க உதவும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. அந்த நீச்சலில் பல வகையான டெக்னிக்ஸ் உள்ளது. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தசையை வலுப்படுத்தும். அதில் வயிற்றுப் பகுதியைக் குறைக்கவும் வலுப்படுத்தவும் சில டெக்னிக்ஸ் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தான் இங்கு கூற இருக்கிறோம்... அதை பார்ப்போமா?
நீச்சலைப் பற்றிய சில தகவல்கள்:
நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். ஆனால் பிற உடற்பயிற்சிகளைச் சரியான முறையில் செய்ய வேண்டும். சரியான முறையில் செய்யவில்லை என்றால் உள்காயங்கள் ஏற்படும். ஆனால் நீச்சலில் இந்த வகை காயங்கள் குறைவே. மேலும் நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. சரி, இப்போது வயிற்றுப் பகுதியை வலிமைப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.


1. பிடித்த நீச்சல் வகையை வைத்துப் பல முழு-சுற்றுகளை முடிக்கவும். நீச்சலில் பொதுவான முறைகளான வண்ணத்துப்பபூச்சி அசைவு, பின்புறமாக நீச்சல் அடித்தல், முங்கு நீச்சல் என இவை அனைத்தும் வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும். இந்த மூன்று வகையையும் மாற்றி மாற்றி, ஒரு முழு-சுற்று செய்வதன் மூலம் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
2. தண்ணீரில் உடல் எடைக் குறைவாக இருப்பதாலும், எளிதில் அசைக்க முடிவதனாலும், நீந்தாமல் நடந்தாலே, உடல் வலிமை அடையும். அவ்வாறு நடக்கும் போது, நீர் குறைந்த பகுதியில் கால்களை மடக்கி முட்டியை வைத்து நெஞ்சைத் தொடச் செய்யவும். இவ்வாறு செய்யும் போது, முதுகு பகுதி நேராகவும், வயிறு சற்று உள்ளே இழுத்தவாறும் இருப்பது அவசியம். முட்டியை உயர்த்தும் போது, வயிறு நன்றாக அமுங்க வேண்டும்.
3. அதேப்போல் நீர் நிறைந்த பகுதியில் முன் கூறியவாறு செய்யும் போது, நீச்சல் குளத்தின் சுவரை நன்றாக பிடித்துக் கொள்வது கால்களை எளிதில் தூக்க உதவும். இந்த பயிற்சியை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவோ வேகமாக செய்வது நல்ல பலனைத் தரும்.
4. ஒரே இடத்தில் நின்று கொண்டு கையையும், கால்களையும் அசைப்பது கூட நல்ல பயிற்சி. இந்த பயிற்சி செய்யும் போது வலியே இருக்காது, ஆனால் நீரை விட்டு வெயியே வந்த பின் வலி உயிர் போகும். ஆகவே கவனம் தேவை. இந்த பயிற்சியைக் குறைந்த நேரம் செய்வது நல்லது.
5. அடுத்ததாக நீச்சல் பழகும் போது உபயோகிக்கும் பலகை ஒன்று உள்ளது. அதை ஆங்கிலத்தில் கிக்போர்டு (Kickboard) என்று கூறுவார்கள். நீச்சலைப் புதிதாக பழகுபவர்கள், இதனைப் பிடித்துக் கொண்டு கால்களை ஆட்டி நீந்துவார்கள். வயிறு குறையவும், இதையே செய்யலாம். ஆனால் நல்ல பலனைப் பெற கால்களையும், உடலையும் நீருக்கு மேல் வருவது போல செய்ய வேண்டும். அப்படி செய்தால் வயிறு நன்றாக குறையும். இந்த முறைப்படி நீச்சல் அடித்து வயிற்றுப் பகுதியைக் குறையுங்கள்.
கவனிக்க வேண்டியவை:
* நீச்சல் நல்ல பயிற்சி தான். ஆனால் நீரில் மூழ்கும் அபாயத்தை நாம் மறக்கக் கூடாது. எனவே எப்போதும் நிறைய பேர் இருப்பது போல பார்த்துக் கொள்ளவும்.
* நீச்சல் குளத்தில் காப்பாளர் இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் நீச்சல் குளத்தைத் தெரிந்தெடுப்பது நல்லது.
* நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும்.

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை...

குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. அதற்காக எங்கு சென்றாலும் காரில் செல்ல வேண்டும் என்பது பற்றி பேசவரவில்லை. அவ்வாறு வெளியே நீண்ட தூரம் பயணம் செய்வது நல்லதா கெட்டதா என்பது பற்றியது தான்.
ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும். மேலும் இந்த நாட்களில் குழந்தைகளை எளிதில் நோய்கள் தாக்கும் என்பதாலேயே தான். இருப்பினும், ஏதேனும் முக்கியமான விஷயத்திற்காக விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளலாமா என்று கேட்கலாம்?


எனவே தான் அத்தகைய புதிய அம்மாக்களுக்காக பொதுவாக பயணம் மேற்கொள்வது பற்றிய ஒருசில அடிப்படைகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, முடிவெடுங்கள்.
* குழந்தை பிறந்தவுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு, விமான நிறுவனங்களில் ஒருசில குறிப்பீடுகள் உள்ளன. அவை குழந்தை பிறந்து குறைந்தது 2 வாரங்களாவது இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும். எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தாலோ அல்லது பிறவியிலேயே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பே, விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
* பிறந்த குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, செய்ய வேண்டியவற்றில் முக்கியமானவை காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விமானத்தில் பயணம் செய்யும் போது குழந்தையின் காதுகளில் அழுத்தமானது அதிகரித்து, காதுகளில் வலியை உண்டாக்கிவிடும். எனவே இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
* ஒருவேளை ரயிலில் பயணம் செய்வதென்றால், அப்போது எந்த ஒரு குறிப்பீடுகளும் இல்லை. மேலும் ரயிலில் செல்லும் போது குழந்தையும் நன்கு சந்தோஷமாக, எந்த ஒரு தொந்தரவுமின்றி பயணம் செய்யும். ஆனால் முக்கியமாக எங்கு வெளியே சென்றாலும், குழந்தைக்கு வேண்டிய மருந்துகள், ஆடைகள், நாப்கின்கன் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
* காரில் பயணம் செய்வதாக இருந்தால், குழந்தைகளுக்கான பேபி கார் ஷீட் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மடியில் வைத்துக் கொண்டு சென்றால், திடீரென்று ப்ரேக் போடும் போது குழந்தை வழுக்கி விழக் கூட வாய்ப்புள்ளது.
* குழந்தையின் மேல் சூரியனின் கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது குழந்தையின் சருமம் மற்றும் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அவ்வாறு சூரியக் கதிர்கள் பட்டால், அது குழந்தையின் உடலில் வறட்சியை உண்டாக்கிவிடும். அதற்காக குழந்தையை ஏசி இருக்கும் இடத்திற்கு நேராகவும் வைக்க கூடாது. அது குழந்தைக்கு இருமல் அல்லது சளி போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
* எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைக்கு மூன்று வயதிற்கு மேல் இருந்தால், எந்த ஒரு பயமுமின்றி, கார், ரயில் அல்லது விமானம் போன்ற எதிலும் அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.