நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய...

தேவையான பொருட்கள்:
தக்காளி - 100 கிராம்

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 50 மில்லி

கடுகு - 50 மில்லி + ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

புளி - ஒரு எலுமிச்சை அளவு

எண்ணெய் - 25 மில்லி
 
செய்முறை:
தக்காளியுடன் புளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளிக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
ஒட்டாமல் திரண்டு வரும் போது கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆந்திரா தக்காளித் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்

ஆரோக்கியம் கொண்ட உளுத்தம் மாவு புட்டு...!

தேவையானவை:

தோல் உள்ள உளுந்து - 200 கிராம்

புழுங்கல் அரிசி - 100 கிராம்

தேங்காய் - ஒரு மூடி

நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

ஏலக்காய் - சிறுதளவு

உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தையும், அரிசியையும் தனித்தனியே நன்றாக சுத்தம் செய்து அரைத்த மாவை ஒன்றாக கலந்து, இதில் தேவையான அளவு உப்பு போட்டு, சிறுது தண்ணீர் தெளித்து கெட்டியாக சற்றே கரகரப்பான பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதாவது புட்டு மாதிரி பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

புட்டு மாதிரி உதிரியாக வேக வைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும். புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்து கிளறவும். சூடாக சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமள், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.

பலன்கள்:

உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண்களுக்கு கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும் ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

குறிப்பு:

உளுந்தை சற்று லேசாக வறுத்து அரைத்து கொள்ளவும். நல்ல வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.