நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 22 ஜூன், 2011

பார்லி { ஜவ்வரிசி }

பார்லி அல்லது ஜவ்வரிசி என்றழைப்படும் இதில் உடல் ஆரோக்கியத்தை பேணும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.குறிப்பாக இருதயத்திற்கு இது மிகவும் நல்லது.கொழுப்பை எதிர்த்து போராடுவதில் ஓட்ஸை விட பார்லி அதிக திறன் வாய்ந்ததாம்.ஓட்ஸைப் போன்றே பார்லியிலும் 'பீட்டா குளூகோன்' என்ற நார்சத்து அடங்கியுள்ளது.மேலும் கல்லீரலுக்கு தேவையான வைட்டமின் 'டி'யும் இதில் உள்ளது.

கிரீன் டீ

கிரீன் டீ" எனப்படும் பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் கிடைக்கும் பலன்களை சொல்லிமாளாது. பச்சை தேயிலை தேநீர் மகா உசிதம்தான் என்றாலும், சாதா தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயிலும் பச்சை தேயிலையின் நற்குணங்கள் ஓரளவு அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவது போன்ற அற்புதங்களை இந்த பச்சை தேயிலை நிகழ்த்தி காட்டுகிறது.
மேலும் தேநீரில் 'ஃபோலிக் அசிட்' எனப்படும் உயிர்சத்தான ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. இது இருதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தை குறைக்கிறது.நாளொன்றுக்கு ஒருவருக்கு தேவையான ஃபோலிக் அமில சத்தில் 25 விழுக்காடு, ஒருவர் தினமும் ஐந்து கப் தேநீர் அருந்தினால் கிடைக்குமாம்.

ஓட்ஸ்

உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம்பெறுவது இது.நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.
ஓட்ஸில் 'பீட்டா-குளூகான்'என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பதுதான் இதிலுள்ள தனி சிறப்பு.


இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ்தான்.

உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட (220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை - அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு - உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு ஓட்ஸ் நமது உடலில் மேஜிக் நடத்திவிடுகிறது

பூண்டு.

பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக‌க்கூட பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, ‌சீனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்ஃபர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.


ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு‌ம், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்ஃபரே ஆகு‌ம். மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு‌ப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். பு‌ற்றுநோயா‌ல் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்க‌ள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் தா‌ம்ப‌‌த்ய‌த்‌தி‌ல் ச‌ரியாக ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

பித்தம் ,காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு

பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஆகியவை உண்டாகும். செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும்


செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.


காய்ச்சல் குணமாகும்


வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.


சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.


வாசனை திரவியங்கள்


பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.


செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் சம்ப்பா எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் தலைவலி, கண்நோய்கள் குணமாகும். மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை போக்கும்.


வேர்களும், கனிகளும்


உலர்த்தப்பட்ட வேர், வேர்பட்டை மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் தொல்லைகள் போக்க வல்லது. கனிகள் சிறுநீர் மண்டல நோய்களில் உதவுகிறது. விதைகளின் எண்ணெய் வயிற்று உப்புசம் போக்கும் பாதங்களில் வெடிப்பு போக்கவும் உதவுகிறது.

செண்பக பூக்கள் !

செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.


 
கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
 
இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள்.
 
செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.

செண்பக பூக்கள்

செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

ஜாதிக்காய் !

முகத்தை அழகாக்கும்
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்

அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும் , காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தசைப்பிடிப்பை நீக்கும்

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றில் பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதி பத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம்,குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

புதன், 1 ஜூன், 2011

வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.